செய்திகள்

அதியமான்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2018-11-26 16:31 GMT   |   Update On 2018-11-26 16:31 GMT
அதியமான்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்தான்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்துள்ள பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மகேந்திரன் (வயது12). இவர் தருமபுரி தொழில்மையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் மகேந்திரன் தனது நண்பர்களுடன் பூதனஅள்ளி அருகேயுள்ள மூடப்பட்ட கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார். அப்போது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது மகேந்திரனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். 

இதை கண்ட சக நண்பர்கள் உடனே கல்குவாரி குட்டையில் இருந்து மேலே வந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே அவர்கள் வந்து நீரில் மூழ்கிய மகேந்திரனை மீட்டு நல்லம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மகேந்திரன் உடலை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் பூதனஅள்ளி கிராமத்திற்கு சென்று கல்குவாரி குட்டையில் பலியான மாணவர் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News