செய்திகள்

தமிழகத்தில் சினிமா, திராவிட அரசியல் முடிந்துவிட்டது- அன்புமணி ராமதாஸ் பேச்சு

Published On 2018-11-25 20:18 GMT   |   Update On 2018-11-25 20:18 GMT
தமிழகத்தில் சினிமா, திராவிட அரசியல் முடிந்துவிட்டது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். #anbumani #ramadoss #pmk
சென்னை:

பா.ம.க. இளம்பெண்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கட்சி தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, இளம்பெண்கள் சங்கத்தின் செயலாளர் ஜூலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

‘வாக்கு’ என்கிற சூலாயுதம் ஒவ்வொரு பெண்களும் கையில் வைத்து இருக்கிறீர்கள். மாம்பழம் தான் மாற்றத்தை கொடுக்கும். பெண்களை வாழ வைக்கும். இனி வேண்டாம் சூரியன், இரட்டை இலை என்று ஒவ்வொரு வீட்டிலும் திருத்தினால், இந்த நாடு திருந்தும். தமிழ்நாட்டில் மாற்றம் வரும். சமூக புரட்சி வரும். அது வந்தால் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் ரூ.300, ரூ.500 என்று தேர்தலில் லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். மிக்சி, கிரைண்டர், டி.வி. என்று இலவசங்களை கொடுத்து, மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். கல்வி புரட்சி, பசுமை புரட்சி நடக்க வேண்டும் என்று அன்புமணி சொல்லி வருகிறார். அதற்கான திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.

பா.ம.க. ஆட்சியில் பெண்களுக்கு என்று தனி பட்ஜெட் போடப்படும். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற அந்த 3 வார்த்தை 10 வயது குழந்தைகளிடம் போய் சேர்ந்து இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள், பாட்டி-பாட்டனார்களிடம் போய் சேரவில்லை. அதை சேர்க்கும் பணி பா.ம.க. இளம்பெண்களுடையது.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அமைதியான மாற்றம், பெண்கள் மனதில் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமா அரசியல், திராவிடர் அரசியல் எல்லாம் முடிந்து விட்டது. பாட்டாளி அரசியலை மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப பா.ம.க.வினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

பா.ம.க. வித்தியாசமான கட்சி. இனி பிறக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தான் ‘இனிஷியலாக’ வைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கட்டளையிட்டு இருக்கிறார். இந்தியாவில் எந்த கட்சியும் இப்படி சொல்லாது. என் மகள்களுக்கு கூட என் மனைவி பெயர் தான் இனிஷியல்.

மதுவை ஒழித்தாலே பெண்களுக்கு பாதி விடுதலை. பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஒரு மணி நேரத்திலேயே பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். நான் மத்திய மந்திரியாக இருந்த போது 108 ஆம்புலன்சு திட்டத்தை கொண்டு வந்தேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் 99 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதற்கு காரணம் 108 ஆம்புலன்சு தான்.

இந்த செய்தியை பொதுமக்களிடம் பா.ம.க. இளம்பெண்கள் எடுத்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. இளம்பெண்கள் 10 உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் சில உறுதிமொழிகள் வருமாறு:-

* எல்லோருக்கும் தரமான, சமச்சீரான, கட்டணமில்லா, சுமையில்லா திறன்சார் கல்வி, அறிவுசார் கல்வி, தொழில் கல்வி கட்டாயமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாடுபடுவோம்.

* 108 ஆம்புலன்சு புரட்சி போன்று அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்வோம்.

* ஒரு பைசா ஊழல் இல்லாத நேர்மையான, தூய்மையான ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்வோம்.

* மது ஒழிப்பே மக்கள் பணி. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம் அமைப்போம். #anbumani #ramadoss #pmk
Tags:    

Similar News