செய்திகள்

ஆசனூர் அருகே விபத்து: 3 பேர் காயம்

Published On 2018-11-24 16:43 IST   |   Update On 2018-11-24 16:43:00 IST
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே இன்று அதிகாலை லாரியும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தாளவாடி:

மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் மாண்டியாவுக்கு ஜிப்சம் ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது.

லாரியை சாம்ராஜ் நகரை சேர்ந்த மல்லிகார்ஜூனா ஓட்டி சென்றார். அவருடன் கிளீனரான சேத்தன் என்பவரும் இருந்தார்.

இந்த லாரி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள சீவக்காபாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே ஒரு சரக்கு வேன் வந்தது.

அந்த வேன் சாம்ராஜ் நகரில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி ஏற்றி வந்தது. வேனை தாளவாடியை சேர்ந்த மஞ்சிநாத் என்பவர் ஓட்டி வந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டோரமாக கவிழ்ந்தது. லாரி டிரைவர் மல்லிகார்ஜூனா, கிளீனர் சேத்தன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

சரக்கு வேன் பலத்த சேதம் அடைந்தது. வேன் டிரைவர் மஞ்சிநாத் காயம் அடைந்தார். வேனில் இருந்த தக்காளிகள் ரோட்டிலும், ரோட்டின் ஓரமாகவும் சிதறின.

தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசாரும், அக்கம் பக்கத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர், கிளீனர், வேன் டிரைவர் ஆகியோரை மீட்டனர்.

காயம் அடைந்திருந்த அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News