ஜெயலலிதா சிலையை அவமதிப்பதா? தினகரன் கண்டனம்
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிலை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது.
அந்த சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைப்பு பணி நடந்தது.
ஜெயலலிதாவின் புதிய சிலையை நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா சிலையை பழைய வேஷ்டியால் மூடி வைக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா சிலை மீது வேஷ்டி போட்டு மறைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது.
இதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
முன்பு அவசர கதியில் திறக்கப்பட்ட அம்மாவின் சிலைக்கு மாற்றாக புதிய சிலையை திறந்த நிகழ்வில் அம்மாவை அவமதிக்கும் விதத்தில் அச்சிலையை பழைய துணியால் மூடி வைத்து பின்பு திறந்துள்ளனர்.
இது அம்மாவின் லட்சோப லட்ச தொண்டர்களின் மனதை வேதனையிலும் பெரும் கொதிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அம்மாவுக்கு உரிய மரியாதை எப்போழுதுமே செலுத்த நினைக்காத பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் சார்பாக எனது கடும் கண் டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dinakaran #jayalalithaidol #admkheadoffice