மதுராந்தகம் அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி
செங்கல்பட்டு:
சென்னையில் வசிப்பவர்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக, சொந்த ஊர் செல்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார் (25), அஜித்குமார் (23). இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்தனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர்.
சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள அத்திமனம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே உள்ள சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார், ரோட்டின் தடுப்பு சுவரை தாண்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சந்தோஷ்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
படுகாயம் அடைந்த அஜித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.