செய்திகள்

காதலி தூக்குப்போட்டு தற்கொலை: மன்னார்குடி வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2018-10-26 13:40 GMT   |   Update On 2018-10-26 13:40 GMT
காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் மனமுடைந்த மன்னார்குடி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சடகோபன் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் பாலமுருகபாரதி (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர் சென்னையில் வசிக்கும் தனது அத்தை மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக பேசி வந்தனர். இதற்கிடையே திருமணம் குறித்து இருதரப்பு பெற்றோர் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அத்தை மகள், கடந்த 19-ந்தேதி சென்னையில் வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி தற்கொலை செய்த சம்பவத்தால் பாலமுருகபாரதி மிகவும் மனமுடைந்து இருந்து வந்தார்.

இதையடுத்து நேற்று மாலை மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடம் மீது அவர் ஏறினார். பின்னர் திடீரென மாடியில் இருந்து குதித்தார்.

இதில் அவருக்கு கழுத்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாலமுருக பாரதியை அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News