ராமநாதபுரம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை - போலீஸ் குவிப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 37), விக்கி என்ற விக்னேஷ். இவர்கள் மீது கொலை, மிரட்டல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த மே மாதம் வாலாந்தரவையை சேர்ந்த விஜய், பூமி ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கைதானவர்கள் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து குண்டர் சட்டதில் கைதானது ரத்து செய்யப்பட்டது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதன்படி கார்த்திக் தினமும் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
நேற்று மாலை கார்த்திக் தனது கூட்டாளி விக்கியுடன் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரை ஓட, ஓட விரட்டி வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்தது.
அங்கிருந்து தப்பிய கொலையாளிகள் சிறிது நேரத்திலேயே நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் வாலாந்தரவையை சேர்ந்த ரூபன் (25), முரளி (27), பாஸ்கரன் (40), அர்ச்சுணன்(25), முருகேசன்(37) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விஜய், பூமியின் உறவினர்கள் ஆவார்கள்.
சரணடைந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் 300-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
வாலாந்தரவையில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் அரசு பஸ் இயக்கப்பட வில்லை. கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #bombing #Murder