செய்திகள்

நாகையில் 10 நாட்களாக நடந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

Published On 2018-10-14 17:27 GMT   |   Update On 2018-10-14 17:27 GMT
நாகையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:

இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வலியுறுத்தியும் கடந்த 3-ந்தேதியில் இருந்து நாகையில் விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாகையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 10 நாட்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அளிக்கவில்லை என்றால் வருகிற 25-ந்தேதி நாகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
Tags:    

Similar News