செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: சூழ்நிலை வரும்போது கவர்னர் விளக்கம் அளிப்பார் - பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2018-10-07 12:28 GMT   |   Update On 2018-10-07 12:36 GMT
தமிழக கவர்னர் பன்வாரி புரோகித் சூழ்நிலை வரும்போது துணைவேந்தர் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையாக விளக்கம் அளிப்பார் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்து உள்ளதாகவும், பலகோடி ரூபாய் பணம் இதில் புரண்டு உள்ளதாகவும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னரின் குற்றச்சாட்டு பற்றி தக்கலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவர்னர் கூறி உள்ளார். சூழ்நிலை வரும்போது கவர்னர் அது பற்றி வெளிப்படையாக கூறி விளக்கம் அளிப்பார்.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்கள் பற்றி கேரள தேவசம் போர்டு மந்திரியிடம் பேசி உள்ளேன்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தால் கேரளா-தமிழக உறவு பாதிக்கப்படாது. சுவாமி அய்யப்பனை முழுமையாக உணர்ந்த பெண் பக்தர்கள் யாரும் சபரிமலை செல்ல மாட்டார்கள். நானும் அய்யப்பப் பக்தன்தான். சிறு வயதில் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்று வருகிறேன். இந்த பிரச்சினையில் களங்கம் ஏற்பட்டால் அதை நான், ஏற்க மாட்டேன்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு காரணம் மழை எச்சரிக்கை தான். விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்தித்த விவகாரத்தில் பாரதிய ஜனதா பின்னால் நின்றும் இயக்கவில்லை. முன்னால் நின்றும் இயக்கவில்லை. இது அ.தி.மு.க.-அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இடையே நடைபெறும் பங்காளி சண்டை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News