கேளம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
மாமல்லபுரம்:
கேளம்பாக்கம் அருகே உள்ள கழிப்பட்டூர் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்த போது 35 கிராம் எடை உள்ள சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அமலேஷ், சாய் கிரண், சுகேஷ் என்பது தெரிந்தது. சிறிய கஞ்சா பொட்டலங்களை ரூ. 500-க்கு விற்க கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உல்லாசமாக செலவு செய்வதற்காக கஞ்சா கடத்தி விற்றதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், வட மாநிலத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் மாணவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.