செய்திகள்

தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்

Published On 2018-10-06 12:09 IST   |   Update On 2018-10-06 12:09:00 IST
தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
மதுரை:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலைமான் உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றத்தை இன்றைக்கு அரசியலாக்கி தினகரன் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை மறுக்கவில்லை.

எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது கூறி அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது.


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.விற்கு உள்ள செல்வாக்கை நினைத்து தினகரன் இப்போது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தினகரனின் பழைய முயற்சி புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது. குட்டையை- குழப்பி திருப்பரங்குன்றத்தில் மீன் பிடித்து விடலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது முயற்சி எடுபடாது.

தினகரனின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பை தொண்டர்கள் முறியடிப்பார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
Tags:    

Similar News