செய்திகள்
எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தினகரனை சந்தித்து ஆதரவு கேட்டார் ஓ.பி.எஸ் - தங்க தமிழ்ச்செல்வன்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு கேட்டார் என டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். #OPS #EPS #TTVDhinakaran
மதுரை:
டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, டிடிவி தினகரனின் நண்பரிடம் பன்னீர் செல்வம் நேரம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக, பேச வேண்டும் என நேரம் கேட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டும் தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு நடைபெற்ற இடத்தில், சிசிடிவி கேமராக்கள் இருந்திருக்கும் என்றும், உரிய நேரத்தில் ஆதாரத்தை கொடுப்போம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.