ராஜஸ்தானில் பெண்கள் கேமரா ஃபோன்களை பயன்படுத்த தடைவிதித்து 15 கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம்!
- குடியரசு தினமான ஜனவரி 26 முதல் இந்த தீர்மானம் அமலுக்கு வருகிறது
- குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்களை பயன்படுத்த அக்கிராம பஞ்சாயத்துகள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இக்கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒரு சமூக கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தடை ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்கு கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,
இது தவிர, பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு மொபைல் போன்கள் தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், சமூக நிகழ்வுகள் அல்லது பக்கத்து வீட்டிற்கு கூட மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த மாதம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்றும் சவுத்ரி தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விதிமுறைகள் இக்கிராமத்தில் அடிக்கடி விதிக்கப்படுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அக்கிராம தலைவர்கள் இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கிவைத்து உத்தரவிட்டனர். மேலும் மீண்டும் அவர்கள் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த ஜோடி இதுதொடர்பாக காவல்துறையை அணுக, அதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பெரும்பாலான பெரியவர்களுடன் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் அவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தினர். இதுபோல பல சம்பவங்கள் அக்கிராமத்தில் அரங்கேறி உள்ளன.