செய்திகள்

தஞ்சையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-10-01 15:46 IST   |   Update On 2018-10-01 15:46:00 IST
தஞ்சையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதனை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை, விளார் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த சிரதத்திற்கு உள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இன்று காலை விளார் கண்டிதம்பட்டு பிரிவு சாலையில் ஒன்று திரண்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாயை சரி செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். இதனால் உடனடியாக தொழிலார்களை வரவழைத்து குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News