செய்திகள்

ரபேல் விமானம் வாங்கியதில் பா.ஜனதா இமாலய ஊழல் - நாராயணசாமி

Published On 2018-09-23 11:37 GMT   |   Update On 2018-09-23 11:40 GMT
ரபேல் விமானம் வாங்கியதில் பா.ஜனதா இமாலய ஊழல் செய்துள்ளதாக முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #RafaleDeal #Narayanaswamy

ஆலந்தூர்:

புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்துவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசிடம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் - டீசல் விலை மிக குறைவாக இருந்தது. தற்போதுள்ள பா.ஜனதா ஆட்சியில் கச்சா எண்ணை விலை குறைவாக இருக்கிற போதும் சென்னையில் ரூ. 85, மும்பையில் ரூ.90, கொல்கத்தாவில் ரூ.89 என அதிகமாக உள்ளது.

மத்திய அரசு பெட்ரோலை சுத்திகரித்து மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விட்டர் 32 ரூபாய், 34 ரூபாய் என கொடுக்கும் போது நமது நாட்டு மக்களுக்கு விலை குறைவாக கொடுக்க முடியவில்லை. மக்கள் மீது மத்திய அரசு சுமையை ஏற்றுகிறது. அதற்கு காரணம் தவறான அணுகுமுறை மற்றும் பொருளாதார கொள்கை.

பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர நான் எதிர்க்கவில்லை. பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான முதல் மந்திரிகள் தான் எதிர்க்கிறார்கள். மாநிலத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.

2015-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் பிரான்ஸ் சென்று 126 ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்தார். ஒரு விமானம் ரூ.576 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் பிரதமர் மோடி 26 விமானங்கள் மட்டும் எங்களுக்கு போதும் என்று சொல்லி ஒரு விமானத்துக்கு ரூ.1670 கோடி என விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் நாட்டுக்கு ரூ. 41 ஆயிரம் கோடி நஷ்டம்.

 


 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரபேல் விமானம் வாங்க போட்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்களுக்கு தெரியாதா?

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டும் என பிரதமர் மோடி கூறினார் என பகிரங்கமாக கூறி இருக்கிறார். ரிலையன்ஸ் ஒரு திவாலான நிறுவனம், அதற்கு சாதகமாக மோடி செயல்பட்டு வருகிறார். அதில் மாபெரும் இமாலய ஊழல் நடைபெற்று இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி ரபேல் விமானம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு வாய் திறக்க மறுக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகிறது. பாராளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

போபர்ஸ் ஊழலை சொல்லி காங்கிரசை விமர்சனம் செய்யும் பா.ஜனதா ரபேல் போர் விமானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பா.ஜனதாவுக்கு இனி இறந்த காலம் தான்.

இவ்வாறு அவர் கூறினார். #RafaleDeal #Narayanaswamy

Tags:    

Similar News