செய்திகள்

கோட் பட்டன், கேக்கில் மறைத்து ரூ.25 லட்சம் தங்கம் கடத்தல்- 3 பேர் சிக்கினர்

Published On 2018-09-21 09:37 GMT   |   Update On 2018-09-21 09:37 GMT
துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கோட் பட்டன் மற்றும் கேக்கில் மறைத்து வைத்து ரூ.25 லட்சம் தங்கம் கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். #ChenniAirport
ஆலந்தூர்:

பக்ரைனில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஒரு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சுற்றுலா விசாவில் சென்று வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் அணிந்திருந்த ‘கோட்’டை சோதனை செய்யப்பட்டது.

அதில் பொருத்தப்பட்டிருந்த பட்டன் மற்றும் எம்ப்ராய்டரி டிசைன்கள் அனைத்தும் தங்கம் என தெரிய வந்தது. தங்கத்தை பட்டன்களாகவும், எம்ப்ராய்டரி டிசைன்களாகவும் மாற்றி கடத்தி வந்துள்ளார். எனவே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் எடை 270 கிராம். அதன் மதிப்பு ரூ.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்ற கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திலும் பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர். சென்னையைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் கைப்பை மற்றும் லக்கேஜை சோதனையிட்ட போது தங்கத்தை ‘கீ செயின்’ ஆகவும், பெரிய கம்பி வடிவிலும் மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து 200 கிராம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சமாகும்.

மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திலும் பயணிகளிடம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சிவகங்கையைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ‘சுவீட்’ மற்றும் ‘கேக்‘குகள் அடங்கிய பெட்டிக்குள் தங்கம் கட்டிகளை வைத்து கடத்தி வந்து இருந்தார்.

அவரிடம் இருந்து 350 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10.5 லட்சம் இன்று அதிகாலை நடந்த சோதனையில் மொத்தம் 850 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.25.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #ChenniAirport
Tags:    

Similar News