சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்- 5 பேர் சிக்கினர்
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து 300 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த மேலும் 2 விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 370 கிராம் தங்கம் மற்றும் மற்றொரு பயணியிடம் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் தங்கம் கடத்தி வந்து இருந்தார். அவரிடம் 200 கிராம் தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம்.
சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கம் மற்றும் ரூ.8½ லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த காமிராக்கள், மின்சாதன பொருட்கள் பிடிபட்டது.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 5 விமானங்களில் கடத்தி வந்த ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தி வந்தவர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #chennaiairport #goldseized