நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்: பிப்ரவரி 8ம் தேதி தேர்தல்
- ஜப்பானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
- சனே தகைச்சிக்கு மக்களிடையே 70 சதவீதம் ஆதரவு உள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், ஜப்பானிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.