செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது கேட்பது முறையானது அல்ல- திவாகரன் பேட்டி

Published On 2018-09-16 10:02 GMT   |   Update On 2018-09-16 10:02 GMT
ஜெயலலிதா மேல் குற்றச்சாட்டு இருக்கும் போது பாரத ரத்னா விருது கேட்பது முறையாக இருக்காது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். #divakaran #jayalalitha #BharatRatnaAward

மன்னார்குடி:

அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாவின் சொற் பொழிவுகளை தொகுத்து பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அண்ணாவின் சாதனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும்.

அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் லஞ்ச வாவண்யங்களை தவிர்த்து நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இளைஞர்கள் அண்ணாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரிசி பிரச்சினை, பட்டினி சாவை அண்ணா தடுத்து நிறுத்தினார்.அண்ணா இருந்திருந்தால் திராவிடர் கழகம் பிரிந்து இருக்காது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்ற முள்ளோடு சமாதியில் உள்ளார். அவரின் பெயரில் ஆட்சி நடத்துகிறோம் என சொல்பவர்கள் அந்த முள்ளை அகற்ற முயற்சிக்காமல் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது கேட்பது அரசியல் நாடகம். ஜெயலலிதா மேல் குற்றச்சாட்டு இருக்கும் போது பாரத ரத்னா கேட்பது முறையாக இருக்காது.

திருவாரூர் தொகுதிக்கு கருணாநிதி ஏராளமான திட்டங்களை கருணாநிதி செய்துள்ளார். இதனால் திருவாரூர் மக்கள் இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தான் நன்றிக்கடனுடன் ஓட்டு போடுவார்கள். கருணாநிதி செய்த நலத்திட்டங்கள் இன்னும் 3 தேர்தல்களில் கை கொடுக்கும் என நினைக்கிறேன்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன், மக்களை ஏமாற்றி ஜெயித்தது போல் திருவாரூர் , திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது.


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதில் கவர்னர் பொறுப்பை தட்டிக்கழித்து காலதாமதம் செய்யக்கூடாது.

மக்களுக்கு எதிராகவும் இயற்கை மற்றும் விவசாயி களுக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படுகிறது. மோடி விவசாயிகள் நலனுக்கு என்று திட்டங்கள் அறிவிக்க அறிவிக்க விவசாயிகள் பின்னோக்கி தான் செல்கின்றனர் .

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு சாமான்ய மக்களின் குரல்வளையை நசுக்கி வருகிறது. மத்திய- மாநில அரசுகள் தங்கள் மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #divakaran #jayalalitha #BharatRatnaAward

Tags:    

Similar News