செய்திகள்
புளியங்குடியில் சிறுத்தை நடமாட்டம்
புளியங்குடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளியங்குடி:
புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கோடை காலத்தில் யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் அடிக்கடி வரும்.
இந்நிலையில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புளியங்குடி மேற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு சிறுத்தை வந்ததற்கான கால் தடம் பதிந்துள்ளது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.