செய்திகள்

அறந்தாங்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய உறவினர்

Published On 2018-09-07 14:46 GMT   |   Update On 2018-09-07 14:46 GMT
அறந்தாங்கி அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை உறவினர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குருந்திரக்கோட்டை  பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கங்காதரன் இறந்து விட்டார். இதையடுத்து தனது மகளுடன் சொந்த ஊரான குருந்திரக்கோட்டை கிராமத்திற்கு வந்த ஜோதிலட்சுமி அங்கு தனது தந்தையுடன் வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் மகள் ராஜேந்திரபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே ஜோதிலட்சுமியின் கணவர் வழி உறவினரான ரமணி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி காலை தாயிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்ற ஜோதிலட்சுமியின் மகள் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததும் எந்தவித தகவலும் இல்லை. பின்னர் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அவரது உறவினர் ஒருவர் வந்து அழைத்து சென்றதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகளை கடத்தியதாக புகார் அளித்தார்.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரமணிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மகள் முறை கொண்ட அவர் எதற்காக  மாணவியை  கடத்தினார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News