செய்திகள்
பினாமி அதிமுக அரசு இருக்கும் தைரியத்தில் பாஜக செயல்படுகிறது - மு.க ஸ்டாலின் ட்வீட்
தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். #MKStalin #DMK #Sophia
சென்னை:
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
நேற்று இது தொடர்பாக கருத்து பதிவிட்ட திமுக தலைவர், “ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! ‘பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!’ ” என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்றும் இது தொடர்பாக அவர் இட்டுள்ள பதிவில், “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.