செய்திகள்

செங்கல்பட்டில் ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை

Published On 2018-09-04 06:23 GMT   |   Update On 2018-09-04 06:23 GMT
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் இரந்து வீசப்பட்ட வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி அங்கு பிணமாக கிடந்தார் என்று போலீசார் விசாரித்தனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து வாலிபர் உடலை ஒருவர் ரோட்டில் வீசி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் பிணமாக கிடந்தவர் செங்கல்பட்டை அடுத்த அமனப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பதும், சென்னையில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.

அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்பத்துடன் சேராமல் சென்னையில் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு உடலை ஆட்டோவில் எடுத்து வந்து வீசி சென்றார்களா? அல்லது ஆட்டோவில் பயணம் செய்த போது குடிபோதையில் திடீரென இறந்ததால் உடலை ரோட்டில் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News