செய்திகள்

முத்துடையான்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி

Published On 2018-09-01 16:23 GMT   |   Update On 2018-09-01 16:23 GMT
அன்னவாசல் அருகே முத்துடையான்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரை சேர்ந்தவர் பழனியான்டி. இவரது மகன் முத்துக்குமார் (வயது30). ஆதனக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம். இவரது மகன் சின்னத்துரை (35). கட்டிட தொழிலாளிகளான, இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுடைய மோட்டார் சைக்கிள் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முத்துடையான்பட்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் திடீரென கீழே விழுந்தனர். இதில் முத்துக்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சின்னத்துரை படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முத்துகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News