செய்திகள்
சங்கராபுரத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
சங்கராபுரம் நகரில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வராததால் இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம்:
சங்கராபுரம் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யபடுகிறது. சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வரவில்லை. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சங்கராபுரம் பேரூராட்சி முன்பு சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் வைத்திலிங்கம், போலீஸ்லைன் தெருவிற்கு உடனடியாக தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.