செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி 3 வாலிபர்கள் தற்கொலை மிரட்டல்

Published On 2018-08-22 10:16 GMT   |   Update On 2018-08-22 10:16 GMT
திருநீர்மலை அடிவாரத்தில் குப்பை, கழிவுநீர் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி 3 வாலிபர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் திருநீர் மலையின் அடிவாரப் பகுதியில் குப்பைகள், கழிவுநீர் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மலையடிவாரத்தில் கழிவுநீர், குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து குப்பைகள், கழிவுநீர் அங்கு கொட்டப்பட்டு வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதி திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்த விக்கி, பிரபாகர், தீனா ஆகிய 3 பேர் இன்று காலை திடீரென தெற்கு மாட வீதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

திருநீர்மலை அடிவாரத்தில் குப்பை - கழிவுநீர் கொட்டக்கூடாது என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சங்கர்நகர் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News