செய்திகள்
பணம் கொடுத்தால் மார்க் விவகாரம் - அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் நீக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு மார்க் அளிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், பதிவாளர் கணேசனை நீக்கி துணை வேந்தர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். #AnnaUniversity
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமானது. தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகம் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், சில நூறு கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக பதிவாளராக உள்ள கணேசனுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில், பதிவாளர் கணேசனை நீக்கி துணை வேந்தர் சூரப்பா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜெ.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.