செய்திகள்

பழனி அருகே சமரசத்துக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

Published On 2018-07-13 17:54 IST   |   Update On 2018-07-13 17:54:00 IST
பழனி அருகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் பேசிய சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியில் இருந்து மணல் திருடப்பட்டு வருவதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இன்று காலை சின்ன காந்திபுரம் பகுதியில் மணல் அள்ளி வந்த ஒரு லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பயிற்சி டி.எஸ்.பி. பரத், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

மணல் கடத்தல் குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரத்துடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக சொல்லிய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜை தாக்கினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தும் கேட்கவில்லை. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை எடுத்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.

Tags:    

Similar News