செய்திகள்

நாகர்கோவில் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்கு

Published On 2018-06-28 12:49 GMT   |   Update On 2018-06-28 12:49 GMT
காதலித்து திருமணம் செய்ததில் 15 வயது சிறுமி கர்ப்பம் ஆனதால் காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கோவளம் டி.சி. நகர் பகுதிக்கு வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ராஜேஷ் காதலித்தார்.

இந்த தகவல் அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ராஜேஷ் தனது ஊருக்கு வந்தார். அவரது உறவினர்கள் ராஜேசுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

அங்குள்ள ஒரு வீட்டில் ராஜேசும், அந்த பெண்ணும் குடித்தனம் நடத்தினர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதற்கு பரிசோதனை செய்வதற்காக ராஜேஷ், அந்த பெண்ணை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். சிறுமி போல் இருந்ததால் அந்த பெண்ணின் வயதை கேட்டனர். அப்போது அவர் தனக்கு 15 வயதே ஆவதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் நேரில் வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது ராஜேஷ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பலமுறை அவர் தன்னுடன் உறவு கொண்டதால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவரை கர்ப்பமாக்கியதற்காக ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராஜேசுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் அபிஷா, சரோஜா, சுதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராஜேசும், அவரது உறவினர்களும் தலை மறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News