செய்திகள்

காரை ஓட்டும்போது விபத்து: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி காலமானார்

Published On 2018-06-27 16:22 GMT   |   Update On 2018-06-27 22:26 GMT
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார் #PersonalSecretary #Viswanathan #RIP
சென்னை:

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

திருச்சி கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர், கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உள்பட பல உயரிய பதவிகள் வகித்தவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன். இவர் சென்னை அண்ணாநகர் பொன்னிகாலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

விஸ்வநாதன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் வெளியே கிளம்பினார். காரை பின்புறமாக இயக்கும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது பலமாக மோதியது. இதில் அவர் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று மாலை உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் அவரது உடல் நியூ ஆவடி ரோட்டில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஸ்வநாதனுக்கு ஆதிரைசெல்வி என்ற மனைவியும், கவுதமன், அசோக்குமார் என்ற 2 மகன்களும், மித்ரா என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News