செய்திகள்
புதுக்கோட்டை: நடுக்கடலில் படகு மூழ்கியதால் 5 மீனவர்கள் தத்தளிப்பு
தடையை மீறி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் 5 மீனவர்கள் தத்தளித்தனர். பின்னர் அவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் சுமார் 600 விசைப்படகுகள் மூலம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீன்பிடி தடைகாலத்தால் மீனவர்கள் யாரும் கடந்த 2 மாதமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் விசைப்படகுகளை கடற்கரைகளில் நிறுத்தி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தடை காலம் முடிவடைந்ததையடுத்து நேற்று நள்ளிரவு கோட்டைப்பட்டினம், ஜெகதாப் பட்டினத்தில் இருந்து சுமார் 475 விசைப்படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் வரை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதனிடையே ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிக விலைக்கு மீன்கள் விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக கருதி நேற்று காலை தடையை மீறி ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முருகையன் என்பவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது . அதில் சென்ற கணேசன், தமிழ்செல்வன் உள்ளிட்ட 5 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பின்னர் அவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.