வேதாரண்யம் அருகே 10 கிலோ கஞ்சா பதுக்கி விற்ற 4 பேர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பாலு மற்றும் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம், மயிலாடுதுறை தனிப்படை உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் ரகசிய தகவலின் பேரில் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை பகுதிக்கு ரோந்து பணி சென்றனர்.
அப்போது அங்குள்ள அக்கரை பள்ளிவாசல் தென்புறம், கடற்கரை பகுதியில் 4 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் புஷ்பவனத்தை சேர்ந்த சுகுமாறன் (வயது 24), கோடியக்காடு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (43), புஷ்பவனத்தை சேர்ந்த குமரசெல்வம் (40), அதே பகுதியை சேர்ந்த உமா ரமணன் (23) ஆகிய 4 பேரும் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு உள்ளிட்ட குழுவினர் அவர்கள் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கிலோ கொண்டு கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.