செய்திகள்

சிவகங்கையில் கடைகள் அடைப்பு- அ.தி.மு.க.-தி.மு.க. மோதல்

Published On 2018-05-25 10:58 GMT   |   Update On 2018-05-25 10:58 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

சிவகங்கை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன. சிவகங்கை நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நகர் பகுதியில் அ.தி.மு.க. நகர பொருளாளர் முஸ்தபா தனக்கு சொந்தமான டீக்கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன் உள்பட சிலர் கடையை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வினர் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, கல்லல் ஆகிய பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மானாமதுரையில் புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, சுந்தரபுரம் கடை வீதி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News