செய்திகள்

3 மாவட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Published On 2018-05-24 12:14 GMT   |   Update On 2018-05-24 12:14 GMT
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #10thRevaluation
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியாமலும், வெளியூர் செல்ல முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இணையதள சேவை முடக்கப்பட்டதால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி மறுகூட்டலுக்கு தமிழக அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பகுதிகளில் அமைதி திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #10thRevaluation

Tags:    

Similar News