செய்திகள்

அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published On 2018-05-16 00:00 GMT   |   Update On 2018-05-16 00:00 GMT
அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. #Jayalalitha #Memorial
சென்னை:

ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சட்டவிரோதமாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.



மேலும் அந்த மனுவில், ‘அடிக்கல் நாட்டு விழாவுக்காக மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பேனர்கள் அவைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற சென்ற என்னை அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினார்கள். அப்போது தாக்குதலை தடுக்காமல், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்தனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. #Jayalalitha #Memorial 
Tags:    

Similar News