செய்திகள்

விராலிமலை அருகே பஸ் - கார் மோதல்: 3 என்ஜினீயர்கள் பலி

Published On 2017-11-27 16:13 IST   |   Update On 2017-11-27 16:13:00 IST
விராலிமலை அருகே சென்னை நோக்கி சென்ற கார் பஸ் மீது வேகமாக மோதிய விபத்தில் 3 என்ஜினீயர்கள் பரிதாபமாக இறந்தனர்.
விராலிமலை:

சென்னை திருவான்மியூர் ஈஸ்வரா அபார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த தாம்சன் மகன்கள் ஹீமோபி (வயது 34), டைட்டஸ் (30). இவர்கள் இருவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தனர்.

இவர்களது நண்பர் தர்மபுரி மாவட்டம் பாலமேட்டை சேர்ந்த சதீஸ் (24). இவரும் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் புறப்பட்டு சென்றனர்.

அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஹீமோபி, டைட்டஸ், அவர்களது சகோதரி ஸ்ரீபா, சதீஸ் ஆகிய 4 பேரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ஹீமோபி ஓட்டிவந்தார். அவர்களது கார் இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் விராலிமலை ஊருக்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டு விராலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏறியது.

அந்த சமயம் எதிர்பாராத விதமாக சென்னை நோக்கி சென்ற கார் பஸ் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த ஹீமோபி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் படுகாயம் அடைந்த டைட்டஸ், சதீஸ் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். ஸ்ரீபா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து நடந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் டி.எஸ்.பி. பாலகுரு, விராலிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News