செய்திகள்

மகன் காதலியுடன் திடீர் ஓட்டம்: தந்தை விஷமருந்தி தற்கொலை

Published On 2017-11-20 19:53 IST   |   Update On 2017-11-20 19:53:00 IST
அறந்தாங்கி அருகே மகன் காதலியுடன் வீட்டை விட்டு சென்று விட்டதால் மனமுடைந்த தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 47), விவசாயி. இவரது மகன் அருண் பாண்டியன் (23). இவர்களது பக்கத்து வீட்டில் உறவினரான சவுந்திர பாண்டியன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அருண் பாண்டியன் கோவையில் கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வந்தார். தந்தையை பார்க்க அவ்வப்போது  ஊருக்கு வந்து செல்வார்.

இந்நிலையில் உறவினர்கள் என்பதால் அருண்பாண்டியனும், சவுந்திரபாண்டியனின் மகள் சுவிதாவும் (21) நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு அறிவழகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் அருண்பாண்டியன் நேற்று முன்தினம் சுவிதாவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அறிவழகன் நேற்று மாலை அறந்தாங்கி ரத்தினக்கோட்டை சாலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு படுத்து விட்டார்.

மயங்கி கிடந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அறிவழகன் இறந்தார்.

Similar News