செய்திகள்

தலையில் கல்லை போட்டு கல்லூரி மாணவி கொலை: காதலன் வெறிச்செயல்

Published On 2017-04-22 10:20 GMT   |   Update On 2017-04-22 10:20 GMT
பூம்புகார் அருகே வேறுஒருவரை காதலிப்பதாக கூறிய கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன் போலீசில் சரண் அடைந்தார்.
சீர்காழி:

பூம்புகாரில் தலையில் கல்லைபோட்டு கல்லூரி மாணவியை காதலன் கொலை செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி செல்லநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் துர்கா (வயது 19). இவர் கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர் பள்ளியில் படித்து வந்த போது அவருடன் பூம்புகார் சுனாமி குடியிருப்புபகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன்ராஜ் (22) என்ற வாலிபரும் படித்து வந்துள்ளார். அதில் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் மதன்ராஜ் பூம்புகாரில் வசித்து வந்தார். அடிக்கடி புதுக்கோட்டைக்கு சென்று துர்காவை சந்தித்து பேசிவந்துள்ளார். இந்த நிலையில் சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள கல்லூரிக்கு துர்கா படிக்க சென்றுவிட்டார். மதன்ராஜ் மீன்பிடிக்கும் தொழிலுக்கு சென்றுவிட்டார்.

இதனால் அவர்களின் சந்திப்பு குறைய தொடங்கியது. அடிக்கடி செல்போனில் மதன்ராஜிடம் பேசி வந்த துர்கா கல்லூரிக்கு சென்ற பின்பு சரிவர பேசவில்லையாம்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துர்காவின் செல்போனிற்கு மதன்ராஜ் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது துர்கா உன்னிடம் பேச விரும்பவில்லை என கூறி அவரது செல்போன் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மதன்ராஜ் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டைக்கு வந்திருந்த துர்காவை தொடர்பு கொண்டு உன்னை தனியாக சந்தித்து பேச வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்று துர்காவை அழைத்துக்கொண்டு பூம்புகார் கடற்கரைக்கு வந்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவரை தான் விரும்புவதாக துர்கா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் துர்காவை அடித்து கீழே தள்ளி கடற்கரையில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துர்கா துடிதுடித்து இறந்தார்.

பின்னர் மதன்ராஜ் சீர்காழி போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துர்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதன்ராஜிடம் சீர்காழி டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News