செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே கூட்டுறவு சங்க செயலாளர் மீது தாக்குதல்

Published On 2017-03-13 16:05 IST   |   Update On 2017-03-13 16:05:00 IST
ஜெயங்கொண்டம் அருகே கூட்டுறவு சங்க செயலாளர் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து மீன்சுருட்டி போலீசார் தேடிவருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் ஒன்றியம், மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவர் முத்துச்சேர் வாமடம் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் பரத்துக்கும்(29) மயிலாடுதுறை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்யா லட்சுமி(27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சரண்யாலட்சுமியின் சகோதரர் சீனு(எ)சீனிவாசன், தனது நண்பர்கள் 6பேருடன் பரத் வீட்டிற்கு சென்று செல்வராஜிடம் தனது சகோதரியுடன் பிரச்சனை செய்வதாக கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவருடன் வந்த 6 பேரும் சேர்ந்து செல்வராஜை தாக்கிவிட்டு கொலைமிரட்டல் விடுத்துச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து மீன்சுருட்டி போலீசார் சீனிவாசன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Similar News