வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகள்: மாநகராட்சி திட்டம்
- சாலையோர கடைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- வடசென்னையில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதிரி உணவு விற்பனை மண்டலம்.
பெரம்பூர்:
சென்னையில் சாலையோரத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சாலையோர கடைகளை முறைப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து உணவு விற்பனை மண்டலத்தை தனியாக ஏற்படுத்தி அதில் சாலையோர கடைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக வடசென்னையில் முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமைய உள்ளது. இதற்காக எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில் அமைந்துள்ள கேப்டன் காட்டன் கால்வாய் அருகே உள்ள இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர்.
இந்த இடம் சுமார் 270 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 150 உணவு கடைகள் மற்றும் பூ விற்பனை, பொருட்கள் விற்பனை கடைகள் அமைய உள்ளது. இதற்கான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து பார்வையிட்டனர்.
இது தொடர்பான அறிக்கை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்த
தும் விரைவில் அப்பகுதியில் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, `எம்.கே.பி.நகரில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாய் பகுதி அகலமான நடைபாதைகள் கொண்ட முக்கிய சாலை என்பதால் இந்த பகுதியை தேர்வு செய்துள்ளோம்.
தற்போது அங்கு பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். உணவு விற்பனை மண்டலம் அமைக்க இந்த சாலை பொருத்தமானது. 96 விற்பனையாளர்கள் அங்கு வர ஏற்கனவே தயாராக உள்ளனர் என்றார்.