செய்திகள்

மான் வேட்டை வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து சல்மான் கானுக்கு விலக்கு

Published On 2017-01-25 15:53 IST   |   Update On 2017-01-25 15:53:00 IST
படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று (25-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சல்மான் கான் உள்ளிட்டவர்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, கண்காணிக்க வேண்டி இருப்பதால் இன்று ஜோத்பூர் நகருக்கு வரும் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சல்மான் கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் இன்றைய விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பத் சிங் ராஜ்புரோஹித், அடுத்தகட்ட விசாரணையின்போது நடிகர் சல்மான் கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News