லைஃப்ஸ்டைல்

முகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா?

Published On 2018-10-20 03:15 GMT   |   Update On 2018-10-20 03:15 GMT
திருமணத்திற்கு முன்பு பருக்களை நீக்க கிரீம்களை பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
இதயம் பாதிக்கப்படுவதை தடுக்க புகைபிடித்தலை தவிர்க்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு.

எனவே பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தை காத்தல் அவசியம். பொதுவாக திருமணமான உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். இப்போது பெரும்பாலான பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

பருவ வயதில் ஏற்படும் பருக்களை நீக்க இளம்பெண்கள் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது, ஒருவித அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. அது கருவில் சிசுவின் இதயத்தை பாதிக்கின்றது. திருமணத்திற்கு முன்பு இவற்றை பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

இந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இந்த கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களை தவிர்த்தல், சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

தற்போது ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளை தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும்.

கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இந்த பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு பெண் தாய்மையை உணர்வதற்கு முன்பே கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும்.

கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த காலக்கட்டத்தில் மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.
Tags:    

Similar News