லைஃப்ஸ்டைல்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கான உணவுகள்

Published On 2018-08-07 03:34 GMT   |   Update On 2018-08-07 03:34 GMT
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் மலச்சிக்கல் பிரச்சனையும் ஒன்றாகும். இந்த பிரச்சனைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் உடம்பில் ஏராளமான மாற்றங்களை பெண்கள் சந்திக்க நேரிடும். அதில், மலச்சிக்கல் பிரச்சனை பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும்.

இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது, அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும். அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு சீரகம் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.

* வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

* தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.

* நவதானியங்களால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகமாவதை தவிர்ப்பதோடு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.

* ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

* தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்.
Tags:    

Similar News