குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வர காரணங்கள்

Published On 2022-09-21 05:48 GMT   |   Update On 2022-09-21 05:48 GMT
  • குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு.
  • குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள்.

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு.

நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் 'எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள். சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி.

வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப்பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்த புறநாசி துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு 'மூக்குப் பெட்டகம்' என்று பெயர். இதன் ஆரம்ப பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு 'லிட்டில்ஸ் ஏரியா ' என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாக சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும்.

இதை 'சில்லுமூக்கு' என்றும் பொதுவாக சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்த பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.

குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கை பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தம் வரலாம்.

குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் 'அண்ணச்சதை' வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் வரும். படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியலாம். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது.

Tags:    

Similar News