வழிபாடு

திருவண்ணாமலையில் நாளை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Published On 2023-03-05 08:45 GMT   |   Update On 2023-03-05 08:45 GMT
  • 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை 6-ந்தேதி காலை 5.08 மணிக்கு தொடங்கி 7-ந்தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 6-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதோடு, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 6-ந்தேதி (நாளை) மாசி மகத்தை முன்னிட்டு பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமி நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags:    

Similar News