வழிபாடு

திருப்பதி கோதண்டராமர் கோவில்: பிரம்மோற்சவ விழா 5-ந்தேதி கொடியேற்றம்

Published On 2024-03-29 05:09 GMT   |   Update On 2024-03-29 05:09 GMT
  • விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
  • பிரமோற்சவ விழா 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது.

திருமலை:

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தலைமையில் மறு ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறியதாவது:-

ஏப்ரல் 5-ந்தேதி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வாகன சேவை தினமும் காலை 7 மணியில் இருந்து 10 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9-ந்தேதி இரவு கருட வாகனம், ஏப்ரல் 10-ந்தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 13-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.

பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல், கலாசார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு, குடிநீர், மோர், மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளை செய்ய அந்தந்தத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாகன சேவைக்கு முன்னால் பக்தி பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கிறது.

விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களை மீட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு ராமகோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். போதுமான எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்து பக்தர்களுக்கு சேவை செய்யப்படும்.

ஏப்ரல் 17-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை ராம நவமி உற்சவம், ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது. இந்த விழாக்களும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News