வழிபாடு

திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது

Published On 2023-03-06 01:40 GMT   |   Update On 2023-03-06 01:40 GMT
  • பவுர்ணமி இன்று காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது.
  • 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News