பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்
- பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.