வழிபாடு

சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை

Published On 2026-02-18 09:31 IST   |   Update On 2026-02-18 09:31:00 IST
  • இந்த ஆண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
  • வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாகவும், அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் இருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களில் ஈடுபடுவர்.

இதனையொட்டி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் உலகம் அமைதியாக இருக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ், பரிசுத்தராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News