கிரிக்கெட்

பாகிஸ்தானை அலற விட்ட பென் ஸ்டோக்ஸ்... டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

Published On 2022-11-13 11:42 GMT   |   Update On 2022-11-13 17:24 GMT
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.
  • அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பில் சால்ட் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் கேப்டன் ஜாஸ் பட்லர் 26 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச, அணியின் ரன்ரேட் உயர்ந்தது. ஹென்றி ப்ரூக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மொயீன் அலி 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த ஸ்டோக்ஸ் அரை சதம் கடக்க, இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வசமாக்கி உள்ளது. இங்கிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்திய சாம் கரன் "தொடர் நாயகன்" விருதையும் தட்டி சென்றார்.

Tags:    

Similar News